அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இந்த பருவத்திற்கான தேர்வில் இருந்து விலக்கு - மூன்றாமாண்டு மாணவர்களை தவிர

      அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இந்த பருவத்திற்கான தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கு விலக்கு அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் பருவத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களும் பள்ளி தேர்வுகளை ரத்து செய்துள்ளன. கல்லூரிகளை பொறுத்தவரை, கடந்த மார்ச் மாதம் நடக்க இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. இருப்பினும், இந்த பருவத்தில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி, பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


       இறுதியாண்டு மாணவர்களின் இறுதி செமஸ்டர்களை, கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் நடத்தி முடிக்க வேண்டும். தேர்வின் போது முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கல்லூரி பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கல்லூரி பருவத்தேர்வுகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில்நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத்தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அக்குழு தன்னுடைய பரிந்துரையை தெரிவித்துள்ளது. 


       மாணாக்கர்களின் நலன் கருதி, பல்கலை மானியக்குழு UGC மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு AICTE ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, மதிப்பெண் வழங்கி, முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கும் மற்றும் பலவகை தொழில் நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களும்,  முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும், இளநிலை பொறியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும், முதுநிலை பொறியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் பயிலும் மாணாக்கர்களுக்கும், அதேபோன்று எம்சிஏ முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க நான் உத்தரவிட்டுள்ளேன். இது குறித்து விரிவான ஒரு அரசாணை வெளியிட உயர்கல்வித்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளது.


Post a Comment

0 Comments