எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை - மாநில அரசே நடத்தும் என அறிவிப்பு

எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை: மாநில அரசே நடத்தும் என அறிவிப்பு

'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை, மாநில அரசே நடத்தும்' என, மருத்துவகல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
'நாடு முழுதும் உள்ள இளநிலை, முதுநிலை மருத் துவ படிப்புகளுக்கான, 100 சதவீத இடங்களுக்கும் மாணவர் சேர்க்கையை, எம்.சி.சி., நடத்தும்' என, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், அந்தந்த மாநிலங்களின் இடஒதுக்கீடு மற்றும் உள்ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அதற்கு தேவையான இடஒதுக்கீட்டு விபரங்களை, மாநில அரசுகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதை கண்காணிக்க, மாநில அரசுகளின் சார்பில் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கையை தமிழக அரசே நடத்தும் என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனர் சாந்திமலர் கூறியதாவது: வழக்கம்போல், மாநில அரசு ஒதுக்கீட்டில் உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான சேர்க்கையை, மருத்துவ கல்வி இயக்ககம் தான் நடத்த உள்ளது. எனவே, அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடு இடங்களுக்கு, மாணவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

அகில இந்திய ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கை துவங்கியதும், மாநில அரசுஒதுக்கீடும் துவங்கும். இந்தாண்டு விரைந்து மாணவர் சேர்க்கையை நடத்த, எம்.சி.சி., அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments