வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுடன் வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை

வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுடன் வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை?

வங்கி ஊழியர்களுக்கு சம்பள உயர்வுடன் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்கிற முறை விரைவில் அமலுக்கு வரும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசு நிர்வகிக்கும் வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. அந்த வகையில் ஊழியர்களுக்கு 15 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கலாமா என்பது குறித்தும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது. இந்த தகவலை பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.

அதே நேரம் 15 சதவீத ஊதிய உயர்வு என்பது மிகக் குறைவானது என்றும் இதை விட அதிகமாக வழங்கப்பட வேண்டும் என்றும் தொழிலாளர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற பிரபல வங்கிகள் ஊதிய உயர்வுக்கு தேவையான நடவடிக்கைகளை தொடங்கி விட்டது.

வழக்கமாக வழங்கப்படும் 10 சதவீத ஊதிய உயர்வை காட்டிலும் கடந்த செப்டம்பர் மாதம் முதற்கொண்டு 15 சதவீத ஊதிய உயர்வு இந்த வங்கியில் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா காலத்தில் வங்கிகள் லாபத்தில் இயங்குவற்காக பணியாளர்கள் கூடுதல் நேரம் பணியாற்றியதாகவும், இதனை ஈடு செய்யும் வகையில் ஊதிய உயர்வு சதவீதம் அதிகம் இருக்க வேண்டும் என்றும் தொழிற் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்த விவகாரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தீபாவளிக்குள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments