உயர்கல்வி நிறுவன பணி நியமனங்களில் இடஒதுக்கீடு முறை ரத்து - யுஜிசி பரிந்துரையால் சர்ச்சை

  உயர்கல்வி நிறுவன பணி நியமனங்களில் இடஒதுக்கீடு முறை ரத்து: யுஜிசி பரிந்துரையால் சர்ச்சை
உயர்கல்வி நிறுவனங்களில் நேரடி நியமனத்தின்போது காலிப் பணியிடங்கள் நிரம்பாத சூழலில் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்வதற்கு யுஜிசி பரிந்துரை செய்துள்ள விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிநியமனம், மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு கொள்கை அமல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2006-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டன. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ‘சிறப்பு குழு’ ஒன்றை உருவாக்கி திருத்தப்பட்ட இடஒதுக்கீடு கொள்கையை வடிவமைத்தது. இதன் வரைவு அறிக்கை கடந்த டிசம்பர் 27-ம் தேதி வெளியிடப்பட்டது. அதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவுபெற்றது.

இதற்கிடையே உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும்போது இடஒதுக்கீடு முறையை நீக்குவதற்கான விதிமுறைகளும் யுஜிசி வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் கூறும்போது, “உயர்கல்வி நிறுவனங்களில் நேரடி பணிநிய மனத்தின்போது ஏற்படும் காலிப் பணியிடங்களை பொதுநலன் கருதி தொடர அனுமதிக்க முடியாது. எனவே, இடஒதுக்கீட்டின்கீழ் வரும் பணியிடங்களுக்கு போதிய நபர்கள் கிடைக்காவிட்டால், அந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கு இந்த வரைவு அறிக்கை அனுமதிக்கிறது.

அதாவது, எஸ்சி/ எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு ஒதுக்கிய இடங்களை நிரப்ப உரிய ஆட்கள் கிடைக்கவில்லை எனில், அந்த இடங்களை பொதுப்பிரிவுக்கு மாற்றி தகுதியானவர்களை கொண்டு நிரப்பலாம். இந்த காலி பணியிடங்களின் இடஒதுக்கீட்டை நீக்குவதற்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் மத்திய கல்வி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யுஜிசியின் இந்த வரைவு அறிக்கையின் பரிந்துரை ஏற்கப்பட்டால், அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களிலும் இந்த நடைமுறை அமலுக்கு வரும்” என்று தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments