10-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு - மாநிலம் முழுவதும் இன்று தொடங்குகிறது

  10-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு: மாநிலம் முழுவதும் இன்று தொடங்குகிறது
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு இன்று (பிப்.23) தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 26 முதல் ஏப்.8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுத் தேர்வு எழுதவுள்ள 10-ம்வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் இன்று (பிப்.23) தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

மாநிலம் முழுவதும் சுமார் 9.7 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். இதற்காக அனைத்து பள்ளிகளிலும் செய்முறைத் தேர்வுக்கு தேவையான ஆய்வகப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தலைமை கண்காணிப்பாளர்: இந்நிலையில், தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, எவ்வித குளறுபடியுமின்றி பிப்.29-க்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். தேர்வு காலை 9 முதல் 11 மணி வரை, மதியம் 2 முதல் மாலை4 மணி வரை என இருவேளைகளில் நடத்தப்பட வேண்டும்.

தேர்வு நடத்தப்படும் பள்ளியின் தலைமை ஆசிரியரே அந்தமையத்தின் தலைமைக் கண்காணிப்பாளராகச் செயல்பட வேண்டும்.

மேலும், தேர்வில் ஏதேனும் புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பன உட்பட அறிவுறுத்தல்களை தேர்வுத் துறை வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments