பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளை மறுதினம் தொடங்கவுள்ளதாக தகவல்

   பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளை மறுதினம் தொடங்கவுள்ளதாக தகவல்
Click here to Download
பொறியியல் கலந்தாய்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நாளை மறுதினம் (மே 5) தொடங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், உயர்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு மே 5-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. ஜூன் முதல் வாரம் வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்படும். தொடர்ந்து ஜூலை 2-வது வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின் கலந்தாய்வை ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அறிவிப்பு வெளியாகும்’’ என்றனர்.

இதற்கிடையே, தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரைநடத்தப்பட்டது.

இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றுவிட்டது. தொடர்ந்து பொதுத் தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இதற்கான இறுதிகட்ட பணிகளில் தேர்வுத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே தேர்தல் நடத்தை விதிகள் தற்போது அமலில் உள்ளன. இதனால் பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையத்திடம், பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. இத்தகவலை துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Post a Comment

0 Comments