SSA நிலுவை நிதி கேட்டு ஒன்றிய அமைச்சருடன் அன்பில் மகேஷ்
சந்திப்பு
ஒன்றிய அரசின் சார்பில் 2000ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் கல்வி
திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்ட நிலையில், மத்திய இடைநிலைக் கல்வித் திட்டத்துடன்
இணைத்து சமக்ர சிக்ஷா என்று பெயரிடப்பட்டு செயல்படுத்த ஒன்றிய அரசு
உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் தரப்பில்
வழங்கப்பட்டு வந்த நிதி 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.இதனால்
தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தேக்கநிலை ஏற்பட்டு மாணவர்களின்
கல்வி பாதிக்கப்படுகிறது.
இதையடுத்து, நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு
அரசின் சார்பில் ஒன்றிய அரசுக்கு கடிதங்கள் எழுதப்பட்டன. இருப்பினும் நிதி
விடுவிக்கப்படவில்லை.
இதையடுத்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி
மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, சமக்ரசிக்ஷா மாநில திட்ட இயக்குநர்
ஆர்த்தி உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கொண்ட குழுவினர் டெல்லி சென்றனர்.அங்கு, திமுக
நாடாளுன்ற குழுத்தலைவர் கனிமொழி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து
சென்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நாடாளுமன்ற வளாகத்தில்
சந்தித்துப் பேசினர்.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சமக்ரசிக்ஷா திட்டத்துக்காக தமிழ்நாடு
மாநிலத்துக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்
என்றும் மாணவர்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இந்த சந்திப்புக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து
இப் பிரச்னை குறித்து விவாதித்தனர்.
0 Comments